3424. | அக் காலை, அரக்கன், அரக்கு உருக்கு அன்ன கண்ணன், எக் காலமும், இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் நக்கான், உலகு ஏழும் நடுங்கிட; நாகம் அன்ன கைக் கார்முகத்தோடு கடைப் புருவம் குனித்தான். |
எக்காலமும் - முன்பு எப்பொழுதும்; இன்னது ஓர் ஈடு அழிவுற் றிலாதான் - இத்தகைய ஒரு பெருமை அழிவு அடைந்திராதவனாகிய; அரக்கன் - அரக்கன் ஆகிய இராவணன்; அக்காலை - (தன் கொடி அறுபட்ட) அப்பொழுது; உருக்கு அரக்கு அன்ன கண்ணன் - உருக்கிய அரக்கைப் போன்று (சினத்தால் சிவந்த) கண்களை உடையவனாய்; உலகு ஏழும் நடுங்கிட நக்கான் - உலகம் ஏழும் நடுங்கும்படி சினங்கொண்டு சிரித்தான்; நாகம் அன்ன கைக்கார் முகத்தோடு - மலையைப் போன்று தன் கையில் உள்ள வில்லுடன்; புருவக் கடை குனித்தான் - (தன்) புருவங்களின் நுனியையும் வளைத்தான். இதற்கு முன் எப்போதும் இது போல் தன் பெருமை கெடாத இராவணன் சினங் கொண்டு சிரித்துத் தன் வில்லையும் புருவத்தையும் வளைத்தான் என்க. ஈடு - பெருமை. நாகம் - மலை, கார்முகம் - வில். கடைப் புருவம் - புருவ நுனி, நகுதலும் புருவ நுனியை வளைத்தலும் சினக்குறி என்க. 22 |