3425. | சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி மண்ட, சிறகால் அடித்தான் சில; வள் உகீரால் கண்டப்படுத்தான் சில; காலனும் காண உட்கும் துண்டப் படையால், சிலை துண்ட துண்டங்கள் கண்டான். |
பிறைவாள் சண்ட எயிற்றான் - பிறைநிலவு போன்ற ஒளி பொருந்திய பற்களை உடைய இராவணனது; சர தாரை மாரி - அம்புகளாகிய மழையின் மிகுதி; மண்ட - (தன்னை) மிகுதியாக நெருங்க; சில சிறகால் அடித்தான் - சடாயு அவற்றுள் சிலவற்றைத் தன் சிறகால் அடித்து விழுத்தினான்; சில வள் உகீரால் கண்டப் படுத்தான் - சிலவற்றைத் தன் கூர்மையான (கால்) நகங்களால் துண்டுபடுத்தினான்; சிலை - வில்லைக்; காலனும் காண உட்கும் துண்டப் படையால் - யமனும் காண அஞ்சும் (தன்) மூக்காகிய படைக் கலத்தால்; துண்ட துண்டங்கள் கண்டான் - துண்டு துண்டுகளாக ஆக்கினான். பிறை நிலவு போன்ற பற்களை உடைய இராவணன் தன்மீதுபொழிந்த அம்பு மழையைச் சடாயு சிறகாலும், கூர்மையான கால்நகத்தாலும், இராவணனது வில்லைத் தன் மூக்காலும் துண்டுதுண்டுகளாக ஆக்கினான். சண்டம் - கொடுமையும் ஆம், மண்டுதல்- நெருங்குதல் உகீரால் - உகிரால், நகத்தால் செய்யுள் ஓசைக்காகவந்த நீட்டல் விகாரம். துண்டப் படை - மூக்காகிய படைக்கலம்;தாரை மாரி - உருவகம். 23 |