3429. | ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; அவன் தோள் பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி, மூக்கால் கொத்தா, நகத்தால் குடையா, சிறையால் புடையா, முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான். |
ஒத்தான் - வெண் மேகத்தை ஒத்தவன் ஆகிய சடாயு; உடனே உயிர்த்தான் உருத்தான் - உடனடியாகப் பெருமூச்சு விட்டுச் சினந்து; அவன் தோள் பத்தோடு பத்தின் நெடும்பத்தியில் - அந்த (இராவணனது) தோள்கள் ஆகிய இருபதின் வரிசையில்; தத்தி - பாய்ந்து ஏறி; மூக்கால் கொத்தா - மூக்கினால் கொத்தியும்; நகத்தால் குடையா - நகத்தால் பிறாண்டியும்; சிறையால் புடையா - சிறகுகளால் அடித்தும்; முத்து ஆர மார்பில் - (அவனது) முத்து மாலை அணிந்த மார்பில் விளங்கிய; கவசத்தையும் மூட்டு அறுத்தான் - கவசத்தையும் மூட்டுவாய் அறும்படி செய்தான். அம்புபட்ட சடாயு, உயிர்த்து, உருத்து, இருபது தோள்களில் ஏறி, கொத்திக் குடைந்து புடைத்து அவனது மார்பில் விளங்குகிறகவசத்தின் மூட்டுவாய் அறும்படி செய்தான் என்க. ஒத்தான் - முன்பாடலில் கூறிய படி வெண் மேகத்தை ஒத்தவன் என்றபடி. பத்தி -வரிசை, தத்தி - பாய்ந்து ஏறி, மூட்டறுத்தல் - இணைப்பு வாய்நெகிழும் படி செய்தல். கொத்தா, குடையா, புடையா - செய்யாஎன்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சங்கள் முந்தையபாடலும் இதுவும் அந்தாதித் தொடையில் அமைந்து உள்ளமைகாண்க. 27 |