3430. அறுத்தானை, அரக்கனும், ஐம்பதொடு
     ஐம்பது அம்பு
செறித்தான் தட மார்பில்; செறித்தலும்,
     தேவர் அஞ்சி
வெறித்தார்; வெறியாமுன், இராவணன்
     வில்லைப் பல்லால்
பறித்தான் பறவைக்கு இறை,
     விண்ணவர் பண்ணை ஆர்ப்ப.

    அறுத்தானை - (தன்) கவசத்தை மூட்டு அறுத்த
சடாயுவினுடைய; தட மார்பில் - பரந்த மார்பில்; அரக்கனும்
ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் -
அரக்கனாகிய
இராவணனும் நூறு அம்புகளை அழுந்துமாறு எய்தான்; செறித்தலும்
அவன் அவ்வாறு (அம்புகளைப்) பதியுமாறு அழுத்திய அளவில்;
தேவர் அஞ்சி வெறித்தார் -
தேவர்கள் அஞ்சித் திகைத்தார்கள்;
வெறியாமுன் - (அவர்கள் அவ்வாறு) திகைப்பதற்கு முன்பே;
பறவைக்கு இறை - (கழுகு என்னும்) பறவைகளுக்கு அரசன் ஆகிய
சடாயு; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர் கூட்டம் மகிழ்ச்சிப்
பேரொலி செய்ய; இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் -
இராவணனது வில்லைத் (தன்) அலகினால் இழுத்துப் பிடுங்கினான்.

     தன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு
அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே
சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது
வில்லைப் பறித்தான். வெறித்தல் - திகைத்தல், பல் - ஈண்டு மூக்கு,
பண்ணை - கூட்டம், அறுத்தான் - வினையாலணையும் பெயர்.
தடமார்பு - உரிச்சொல் தொடர். முந்தைய பாடலும் இதுவும்
அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை காண்க. சடாயு இராவணன்
போர் தொடர்ந்து இடையீடின்றி நடந்தது.                          28