3438. | மண்மேல் விழுந்தான் விழலோடும், வயங்கு மான் தேர், கண்மேல் ஒளியும் தொடராவகை, தான் கடாவி, விண்மேல் எழுந்தான்; எழ, மெல்லியலாளும், வெந் தீ புண்மேல் நுழையத் துடிக்கின்றனள் போல், புரண்டாள். |
மண் மேல் விழுந்தான் - சடாயு (இராவணனது பொற்கதையால் அடியுண்டு) நிலத்தின் மீது விழுந்தான்; விழலோடும்- (அவ்வாறு அவன்) விழுந்த அளவில்; வயங்கு மான் தேர் - விளங்குகிற குதிரைகள் பூட்டப்பட்ட (தனது) தேரை; கண் மேல் ஒளியும் தொடரா வகை - கண்ணினது பார்வையும் பின்பற்றிச் செல்ல முடியாதபடி; தான் கடாவி - மிக விரைவாகச் செலுத்தி; விண் மேல் எழுந்தான் - (இராவணன் இலங்கையை நோக்கிப் போக) வானத்தில் எழுந்தான்; எழ - (அவன் அவ்வாறு) எழுந்த அளவில்; மெல்லியலாளும் - மென்மைத் தன்மை உள்ள சீதையும்; புண் மேல் வெந்தீ நுழைய - புண்ணில் வெப்பமான நெருப்பு நுழைந்தால்; துடிக்கின்றனள் போல் புரண்டாள் - துடிப்பவள் போல் (துன்பத்தால்) புரண்டாள். இராவணனிடம் அடி வாங்கிய சடாயு நிலத்தில் விழுந்தவுடன்அவன் தன் தேரை விரைவாக வானத்தில் செலுத்திக் கொண்டுஇலங்கையை நோக்கிப் போகப் புறப்பட்டான். அது கண்டு சீதைபுண்ணில் தீ நுழைந்தது போல் துன்புற்று வருந்திப் புரண்டாள். கடாவி- செலுத்தி, 36 |