3439.கொழுந்தே அனையாள் குழைந்து
     ஏங்கியகொள்கை கண்டான்;
'அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை
    அன்னம்!' என்னா,
எழுந்தான்; உயிர்த்தான்; 'அட! எங்கு
     இனிப் போவது?' என்னா,
விழுந்தான் அவன் தேர்மிசை,
     விண்ணவர் பண்ணை ஆர்ப்ப.

    கொழுந்தே அனையாள் - இளந்தளிர் போன்று (மிக்க
மென்மைத் தன்மை உடைய) சீதை; குழைந்து ஏங்கிய கொள்கை
கண்டான் -
வாடி வருந்திய செயலைக் கண்டவன் ஆகிய சடாயு;
அன்னம் - அன்னப்பறவை போன்றவளே; அவலத்திடை
அழுந்தேல் -
துன்பத்தில் மூழ்க வேண்டாம்; அஞ்சலை -
அஞ்சாதே; என்னா - என்று (ஆறுதல் கூறி); உயிர்த்தான்
எழுந்தான் -
பெருமூச்சு விட்டு எழுந்தான்; அட இனி எங்குப்
போவது என்னா -
அடே இனி (நீ) எங்கு (த் தப்பிப்) போவது
என்று சொல்லி; அவன் தேர்மிசை - அந்த இராவணனது தேரின்
மீது; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர்களின் கூட்டம்
(மகிழ்ச்சிப்) பேரொலி செய்ய; விழுந்தான் - பாய்ந்தான்.

     மென்மைத் தன்மை உடைய கொழுந்து போன்ற சீதை
வருந்துதலைக் கண்ட சடாயு 'அன்னம், அஞ்சி அவலிக்காதே' என
ஆறுதல் கூறி இராவணனைப் பார்த்து 'அடே நீ எங்கே தப்பிச்
செல்வது' என்று கூறி, விண்ணவர் பண்ணை ஆர்ப்பத் தேர்மிசைப்
பாய்ந்தான். கொள்கை - செய்கை. பண்ணை - மகளிர்
விளையாட்டாயம். ஈண்டுக் கூட்டத்தைக் குறித்தது. அஞ்சலை -
முன்னிலை ஒருமை வினைமுற்று. அன்னம் - உவமையாகு பெயர்;
இங்கு அண்மை விளியாய் வந்தது.                              37