3441. திண் தேர் அழித்து, ஆங்கு அவன்
     திண் புறம் சேர்ந்த தூணி
விண்தான் மறைப்பச்
     செறிகின்றன, வில் இலாமை,
மண்டு ஆர் அமர்தான்
     வழங்காமையின், வச்சைமாக்கள்
பண்டாரம் ஒக்கின்றன, வள்
     உகிரால் பறித்தான்.

    திண் தேர் அழித்து - (சடாயு மேலும் இராவணனது) வலிய
தேரை அழித்து; ஆங்கு - அதற்குப் பிறகு; வில் இலாமை -
(அவனது கையில்) வில் இல்லாமையால்; மண்டு ஆர் அமர்தான்
வழங்காமையின் -
நெருங்கிச் செய்யும் கொடிய போருக்கு உதவும்
அம்புகளைத் தராமையால்; வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன -
உலோபிகளுடைய கருவூலத்தை ஒத்து அமைவனவாகி; விண்தான்
மறைப்பச் செறிகின்றன -
ஆகாயத்தைக் கூட மறைக்கும்படி
பொருந்தி உள்ள; அவன் திண் புறம் சேர்ந்த தூணி - அவனது
வலிமையான தோள்களின் புறத்தில் கட்டப்பட்டுள்ள, அம்பு அறாத்
தூணியை; வள் உகிரால் பறித்தான் - (தன்) கூர்மையான நகங்களால்
பறித்து எறிந்தான்.

     சடாயு இராவணனது தேரை அழித்து, அவனது முதுகுப் புறத்தில்
கட்டியுள்ள அம்பு அறாத் தூணியையும் பறித்து எறிந்தான்.
வச்சைமாக்கள் பண்டாரம் - கொடைக் குணமற்ற உலோபிகளின்
கருவூலத்தில் பணம் இருந்தும் பிறர்க்குப் பயன்படாதவாறு போல
இராவணன் கையில் வில் இலாமையால் அவனது அம்பறாத் தூணியில்
அம்பு இருந்தும் அது பயன்படவில்லை என்றபடி. வச்சை மாக்கள் -
உலோபிகள். பண்டாரம் - கருவூலம். திண் தேர் - பண்புத் தொகை.    39