3442.மாச் சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும்
     தோள்கள் மேலும்
ஓச்சி, சிறகால் புடைத்தான்;
     உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி
     சாய்ந்து இருந்தான்;
'போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்?'
     எனப் புகன்றான்.

    மார்பினும் தோள்கள் மேலும் - (பின்பு சடாயு இராவணன்
உடைய) மார்பின் மேலும் (இருபது) தோள்கள் மேலும்; மாச்சிச்சிரல்
பாய்ந்தென -
பெரிய சிச்சிலிப் பறவை பாய்வது போல் (பாய்ந்து);
சிறகால் ஓச்சிப் புடைத்தான் - (தன்) சிறகுகளால் விரைவாக எறிந்து
அடித்தான்; இராவணனும் - அதனால் இராவணனும்; உலையா
விழுந்து -
வருந்தி விழுந்து; முடிசாய்ந்து மூச்சித்த இருந்தான் -
தலை சாய்த்து மயங்கிய நிலையில் இருந்தான்; இத்தனை போலும் -
(அத்தன்மை கண்டு சடாயு) இத்தனைதானா; நின் ஆற்றல் - உனது
வலிமை; போச்சு எனப்புகன்றான் - போய் விட்டது என்று
(இகழ்ச்சியாகக்) கூறினான்.

     மாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனதுமார்பிலும்
தோளிலும் தன் சிறகால் ஓச்சிப் புடைத்தான். அதனால்இராவணன்
மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கி, இருந்தான்; அது கண்டசடாயு 'இது
தானா உன் வலிமை' என இகழ்ந்து கூறினான். சிரல் -சிச்சிலி, மீன் கொத்தி.
போச்சு - போயிற்று பேச்சு வழக்கு உலையா -செய்யா என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு வினை எச்சம்.                                      40