கலிவிருத்தம் 3447. | 'வன் துணை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்; எனக்கு இனிப் புகல் என்?' என்கின்றாள்; இன் துணை பிரிந்து, இரிந்து, இன்னல் எய்திய அன்றில்அம் பெடை என அரற்றினாள்அரோ. |
வன்துணை உளன் என - (யான் உனக்கு) வலிமையான துணையாக உள்ளேன் என்று; வந்த மன்னனும் பொன்றினன் - (எதிர்த்து) வந்த கழுகரசனாகிய சடாயுவும் அழிந்தான்; எனக்கு இனிப்புகல்என் - எனக்கு இனிக் கதி என்னவோ; என்கின்றாள் - என்று எண்ணுகின்றவள் ஆகிய சீதை; இன் துணை பிரிந்து இரிந்து - இனிமையான தனது துணையாகிய (ஆண் பறவையைப்) பிரிந்து நீங்கி; இன்னல் எய்திய - (பெருந்) துன்பம் அடைந்த; அன்றில் அம் பெடை என - அன்றில் பறவையின் அழகிய பெட்டை போல; அரற்றினாள் (அரோ) - கதறினாள். என்னைக் காக்க வந்த வலிமையான துணைவன் ஆகிய சடாயு அழிந்தான், இனி எனக்கு வேறு புகலிடம் ஏது?' என எண்ணிய சீதை ஆணைப் பிரிந்த அன்றிற் பேடு போலத் துன்புற்றுக் கதறினாள். அன்றில் - ஆணும் பெண்ணும் பிரியாமல் பனை மரத்தில் வாழும் ஒரு வகைப் பறவை என்பது இலக்கிய மரபு. புகல் - சரண்புகுமிடம்; தொழிலாகுபெயர். 45 |