3453. | விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால், கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள், உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள்; மண்ணிடை, தன்னையும் மறந்து, சாம்பினாள். |
விண்ணிடை - வான வெளியில்; வெய்யவன் ஏகும் வேகத்தால் - கொடியவன் ஆகிய இராவணன் செல்லுகின்ற வேகத்தினால்; கண்ணொடு மனம் அவை - கண்களும் மனமும் ஆகிய அவை; சுழன்ற கற்பினாள் - சுழலும் கற்புடையவள் ஆன சீதை; உள் நிறை உணர்வு அழிந்து - உள்ளத்தில் நிறைந்த அறிவு அழியப் பெற்று; ஒன்றும் ஓர்ந்திலள் - யாதொன்றையும் உணர முடியாதவளாகி; மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் - நிலத்தில் தன்னையும் மறந்து மூர்ச்சை அடைந்து சோர்ந்து கிடந்தாள். இராவணன் வானவெளியில் மண்ணொடும் கொண்டு போன வேகத்தால் சீதை கண்ணும் மனமும் சுழன்று அறிவு அழிந்து மயங்கி விழுந்தாள். ஓர்ந்திலள் - முற்றெச்சம். 51 |