சடாயு வானம் நோக்கி இரங்குதல்

3454. ஏகினன் அரக்கனும்;
     எருவை வேந்தனும்,
மோக வெந் துயர் சிறிது
     ஆறி, முன்னியே,
மாகமே நோக்கினென்;
     வஞ்சன் வல்லையில்
போகுதல் கண்டு, அகம்
     புலர்ந்து சொல்லுவான்:

    அரக்கனும் - அரக்கனாகிய இராவணனும்; ஏகினன் - (மேல்
கூறியவாறு) சென்றான்; எருவை வேந்தனும் - கழுகுகளுக்கு அரசனாகிய
சடாயுவும்; மோக வெந்துயர் சிறிது ஆறி - மயக்கம் தந்த கொடிய
துன்பத்தில் இருந்து சிறிது தெளிந்து; முன்னியே - (சிறிது) எண்ணிப்
பார்த்து; மாகமே நோக்கினென் - இராவணன் சென்ற திசையையே
பார்த்து; வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு - வஞ்சனை உடைய
இராவணன் விரைவாகப் போதல் கண்டு; அகம் புலர்ந்து - மனம் வருந்தி;
சொல்லுவான் - (கீழ்க் கண்டவற்றைச்) சொல்லத் தொடங்கினான்.

     சடாயு மயக்கம் சிறிது ஆறித் தேறி இராவணன் செல்லும் திசையைப்
பார்த்துச் சில சொல்லத் தொடங்கினான். மோகம் - மயக்கம். முன்னி -
எண்ணிப் பார்த்து. மாகம் - திக்கு வானமுமாம். அகம் - மனம்.      52