3458.'வேர்அற அரக்கரை வென்று,
     வெம் பழி
தீரும், என் சிறுவனும்;
     தீண்ட அஞ்சுமால்
ஆரியன் தேவியை அரக்கன்,
     நல் மலர்ப்
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு
     இல் சாபத்தால்.'

    என் சிறுவனும் - என் மகனாகிய இராமனும்; அரக்கரை வேர்
அறவென்று -
(சீதையைக் கவர்ந்ததை முன்னிட்டு) அரக்கர்களை அடி
வேரும் அழியுமாறு முழுதும் வென்று; வெம்பழிதீரும் - (தன்) கொடிய
பழியைத் தீர்த்துக் கொள்வான்; அரக்கன் - அரக்கன் ஆகிய
இராவணனும்; நல்மலர்ப் பேர் உலகு அளித்தவன் - (திருமாலின் நாபிக்)
கமலத்தில் தோன்றி இப்பெரிய உலகைப் படைத்த பிரமனது; பிழைப்பு இல்
சாபத்தால் -
தப்புதல் இல்லாத சாபத்தினால்; ஆரியன் தேவியைத் தீண்ட
அஞ்சும் -
சிறப்புடைய இராமனின் மனைவியாகிய சீதையைத் தொட
அஞ்சுவான்.

     வேர் அற - முழுதும் கெடும் படி, சிறுவன் - மகன் இங்கு இராமன்
ஆல் - அசை.                                               56