3459.பருஞ் சிறை இன்னன
     பன்னி உன்னுவான்,
'அருஞ் சிறை உற்றனள்
     ஆம்' எனா, மனம்;
'பொரும் சிறை அற்றதேல்,
     பூவை கற்பு எனும்
இருஞ் சிறை அறாது' என,
     இடரின் நீங்கினான்.

    பருஞ்சிறை - பெரிய சிறகுகளை உடைய சடாயு; இன்னன பன்னி -
இத்தகைய சொற்களைச் சொல்லி; அருஞ்சிறை உற்றனள் ஆம் எனா
மனம் உன்னுவான் -
(சீதை) நீங்குதற்கு அரிய (இராவணனது) சிறைச்
சாலையை அடைந்தாள் போலும் என்று மனத்தில் நினைத்து; பொரும்
சிறை அற்றதேல் -
போர் செய்கிற (என்) சிறகுகள் அழிவடைந்தது
எனினும்; பூவை கற்பு எனும் இருஞ்சிறை அறாது என - நாகண
வாய்ப்புள் போன்ற (இனிய மொழி பேசும்) சீதையினுடைய கற்பு என்கிற
பெரிய சிறகு அழியாது என்று எண்ணி; இடரின் நீங்கினான் - துன்பம்
நீங்கியவனானான்.

     பலவாறு எண்ணிய சடாயு சீதை இராவணனது நீங்குதற்கு அரிய
சிறைச் சாலையை அடைந்தாள் போலும் என எண்ணி, அவ்வாறெனினும்
என் சிறகுகள் போலச் சீதையின் கற்பெனும் சிறகு அழியாது என எண்ணி
வருத்தம் நீங்கினான். பருஞ்சிறை - பெரிய சிறகுகள்; இங்கு ஆகுபெயராய்ச்
சடாயுவைக் குறித்தது. பூவை - நாகண வாய்ப்புள் (இனிய மொழி) குறித்தது.
சிறையுற்றாலும் கற்பெனும் இருஞ்சிறை அறாது என்றதன் நயம் காண்க.
திருக்குறட் கருத்தையும் உன்னுக. பருஞ்சிறை - பண்புத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை.                                    57