சீதை சிறைப்படல் 3461. | வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய், செஞ்செவே திரு உருத் தீண்ட அஞ்சுவான், நஞ்சு இயல் அரக்கியர் நடுவண், ஆயிடை, சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத்தான் அரோ. |
அரக்கனும் - அரக்கன் ஆகிய இராவணனும்; வஞ்சியை - வஞ்சிக் கொடி போன்ற சீதையை; வல்லை கொண்டு போய் - விரைவாக எடுத்துக் கொண்டு போய்; திரு உரு செஞ்செவே தீண்ட அஞ்சுவான் - (சீதையின்) திருவுருவத்தை (வலிய) நேராகத் தொடுதற்கு அஞ்சியவனாய்; ஆயிடை - அவ்விடத்தில்; சிஞ்சுபவனத்திடை - அசோக வனத்தின் இடையில்; நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் - நஞ்சின் தன்மை பொருந்திய கொடிய அரக்கியர்களுக்கு நடுவில்; சிறை வைத்தான் - (சீதையைச்) சிறைக் காவலில் வைத்தான். இராவணன் சீதையை விரைவாக மண்ணொடுங் கொண்டு போய் அவளது திருவுருத் தீண்ட அஞ்சியவனாய் அசோக வனத்தில் நச்சுத் தன்மை உள்ள அரக்கியர்களுக்கு நடுவில் சிறைக் காவலில் வைத்தான். வல்லை - விரைவாக. சிஞ்சுபவனம் - அசோக வனம். அஞ்சுவான் - முற்றெச்சம். அரோ - அசை. 59 |