3476. | 'அறத்தைச் சீறும்கொல்? அருளையே சீறும்கொல்? அமரர் திறத்தைச் சீறும்கொல்? முனிவரைச் சீறும் கொல்? தீயோர் மறத்தைச் சீறும்கொல்? "என்கொலோ முடிவு?" என்று, மறையின் திறத்தைச் சீறும்கொல் நெடுந்தகையோன்?' என, நடுங்கா, |
நெடுந்தகையோன் - பெருமைப் பண்புகள் உள்ளவனாகிய இராமன்; அறத்தைச் சீறும்கொல் - அறத்தைச் சீறுவானோ?; அருளையே சீறும் கொல் - கருணைப் பண்பையே சீறுவானோ?; அமரர் திறத்தைச் சீறும் கொல் - தேவர்களின் தன்மையைச் சீறுவானோ?; முனிவரைச் சீறும் கொல் - முனிவர்களைச் சீறுவானோ?; தீயோர் மறத்தைச் சீறும் கொல் - தீய அரக்கர்களின் கொடுமையைச் சீறுவானோ?; மறையின் திறத்தைச் சீறும் கொல் என்று - வேதங்களின் தன்மையைச் சீறுவானோ? என்று எண்ணி; என்கொலோ முடிவு என நடுங்கா - (அவன் சினத்தின் முடிவு) என்ன முடிவு ஆகுமோ என்று நடுங்கி, (அடுத்த பாடலில் தொடரும்). அறங்காக்க வந்த தனக்கு உதவாத அறம் முதலிய அறச்சார்புப் பொருள்களையும் அதற்கு எதிரிடையான மறச் சார்புப் பொருளையும் இராமன் சீறுவானோ என்றபடி, திறம் - தன்மை. கொல் - ஐயப்பொருள் தருவதோர் இடைச் சொல். 74 |