3479. | 'ஆம்; அதே இனி அமைவது' என்று, அமலனும், மெய்யில் தாம வார்கணைப் புட்டிலும் முதலிய தாங்கி, வாம மால் வரை மரன் இவை மடிதர, வயவர், பூமிமேல் அவன் தேர் சென்ற நெடுநெறி போனார். |
அமலனும் - குற்றம் அற்றவன் ஆகிய இராமனும்; 'ஆம் அதே இனி அமைவது' என்று - ஆம் அச் செயலே இனிச் செயத்தக்கது என்று கூறி; வயவர் - வீரர்களாகிய இராமலக்குவர்; தாமவார் கணைப்புட்டிலும் முதலிய மெய்யில் தாங்கி - மாலை போல் அமைந்த நீண்ட அம்பு அறாத்தூணி முதலிய (படைக்கலங்களை) உடம்பில் தரித்துக் கொண்டு; வாம மால் வரை - அழகுள்ள பெரிய மலைகள் (மற்றும்); மரன் இவை மடிதர - மரங்கள் ஆகிய இவை அழியும் படி; பூமிமேல் அவன் தேர் சென்ற நெடுநெறி போனார் - பூமியில் அந்த இராவணனது தேர் சென்ற நீண்ட வழியில் சென்றார்கள். அமலன், 'இனிச் செயத்தக்கது நீ கூறிய வாறே' என ஏற்றுக் கொண்டான். உடனே இருவரும் படைக்கலந்தாங்கி இராவணன் தேர் சென்ற வழியில் சென்றனர். தாமம் - மாலை போன்ற வடிவுடைய. வார் - நீண்ட. புட்டில் - அம்பு அறாத்தூணி. வாமம் - அழகு. வயவர் - வீரர். மரன் - கடைப்போலி. 77 |