3489. | மறித்தும் சென்றனர்; வானிடை வயங்குற வழங்கி எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம், நெறிக் கொள் கானகம் மறைதர, நிருதர்கோன் நெஞ்சின், பறித்து வீசிய, கவசமும் கிடந்தது பார்த்தார். |
மறித்தும் சென்றனர் - மீண்டும் (தொடர்ந்து) சென்றனர்; வானிடை வயங்குற வழங்கி - வானத்தில் விளக்கம் உண்டாகும் படி சஞ்சரித்து; எறிக்கும் சோதிகள் - ஒளி வீசுகிற சூரிய சந்திரர்கள்; யாவையும் தொக்கன எனலாம் - முதலிய எல்லாம் ஒருங்கே சேர்ந்தன என்று சொல்லுமாறு; நெறிக் கொள் கானகம் மறைதர - செல்லும் வழி உடைய காட்டு இடம் மறையுமாறு; நிருதர் கோன் நெஞ்சின் பறித்து வீசிய - அரக்கர் தலைவனாகிய இராவணனின் நெஞ்சில் இருந்து (சடாயு) பறித்து எறிந்திருந்த; கவசமும் கிடந்தது பார்த்தார் - கவசம் கிடந்ததையும் (இராமலக்குவர் இருவரும்) கண்டார்கள். மீண்டும் தொடர்ந்து சென்ற இராமலக்குவர் வானத்தில் சஞ்சரிக்கும் சூரிய சந்திரரும் பிற கோள்களும் ஒளியுடன் நிலத்தில் விழுந்தது போல விழுந்து கிடந்த இராவணனது மார்புக் கவசத்தைக் கண்டனர். மறித்தும் - மீண்டும். வயங்குற - விளக்கமாக 87 |