சடாயுவைக் கண்டு இராமன் புலம்பிச் சோர்தல்

3494. மடல் உள் நாட்டிய தார்
     இளையோன் சொலை மதியா,
மிடலுண் நாட்டங்கள் தீ உக
     நோக்கினன் விரைவான்,
உடலுள் நாட்டிய குருதி அம்
     பரவையின் உம்பர்,
கடலுள் நாட்டிய மலை அன்ன
     தாதையைக் கண்டான்.

    மடல் உள் நாட்டிய தார் இளையோன் - பூவிதழ்கள் உள்ளே
அமையத் தொடுக்கப்பட்ட மார்பு மாலையை அணிந்த இளையவனாகிய
இலக்குவன் (கூறிய); சொலைமதியா - சொற்களை மதித்து (ஏற்று);
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் - (காணும்) வலிமை அமைந்த
கண்களில் சினத்தீ வெளிப்படப் பார்த்தவனாகி; விரைவான் - விரைந்து
செல்லுகின்றவனாகிய இராமன்; உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின்
உம்பர் -
உடலில் இருந்து வெளிப்பட்ட இரத்தமாகிய கடலுக்கு மேல்;
கடலுள் நாட்டிய மலையன்ன - கடலுள் (மத்தாக) நாட்டிய
மந்தரமலையை ஒத்த; தாதையைக் கண்டான் - தந்தையாகிய  சடாயுவைக்
கண்டான்.

     இலக்குவன் சொல்லை ஏற்றுச் சென்ற இராமன், கடலில் மத்தாக
அமைக்கப்பட்ட மந்தரமலை போல் தன் உடம்பில் இருந்து வெளிப்பட்ட
குருதிக் கடலிடைக் கிடந்த சடாயுவைக் கண்டான். மடல் - பூவிதழ்கள், தார்
- மார்புமாலை. மிடல் - வலிமை, ஈண்டுப் பார்வைச் சிறப்புக்கு அடையாக
வந்தது. நாட்டம் - கண், பரவை - கடல் உம்பர் - மேல், கடல் -
திருப்பாற்கடல் தார் இளையோன் - இரண்டாம் வேற்றுமைத் தொகை,
சொலை - இடைக்குறை. நோக்கினான் - முற்றெச்சம்.               92