3499. | 'மாண்டேனே அன்றோ? மறையோர் குறை முடிப்பான் பூண்டேன் விரதம்; அதனால் உயிர் பொறுப்பேன்; நீண்டேன் மரம் போல, நின்று ஒழிந்த புன் தொழிலேன்; வேண்டேன், இம் மா மாயப் புன் பிறவி வேண்டேனே! |
மாண்டேனே அன்றோ - (இத்தகு செயல்களுக்குக் காரணமான நான்) இறந்தவனையே ஒத்தவனல்லவா? (அவ்வாறு இறக்காமல் இருப்பதற்குக் காரணம்); மறையோர் குறை முடிப்பான் - வேதத்தில் வல்ல முனிவர்களது குறைகளை நீக்குவதான; விரதம் பூண்டேன் - விரதத்தைக் கைக் கொண்டுள்ளேன்; அதனால் உயிர் பொறுப்பேன் - அதனால் உயிரை (உடலில்) கொண்டவனாகி; நீண்டேன் - வாழ் நாள் நீட்டிக்கப் பெற்றுள்ளேன்; மரம்போல நின்று - மரம் போல வளர்ந்து நின்று; ஒழிந்த - யாது ஒரு பயனும் இல்லாத; புன்தொழிலேன் - புல்லிய தொழிலை உடையவனாகிய நான்; இம் மா மாயப் புன் பிறவி - இந்த மயக்கம் நிறைந்த இழி பிறப்பை; வேண்டேன் வேண்டேனே - விரும்பேன் விரும்பேன். முனிவர் குறை தீர்க்க விரதம் பூண்டதே காரணமாக வாழ வேண்டியிருக்கிறதே என்று தன் வாழ்வையே வெறுத்துப் பேசுகிறான். வேண்டேன் வேண்டேன் என்ற அடுக்கு வாழ்க்கை மீது கொண்ட வெறுப்பைக் குறித்தது. 97 |