3500. | 'என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை, சான்றோயை, கொன்றானும் நின்றான்; கொலையுண்டு நீ கிடந்தாய்; வன் தாள் சிலை ஏந்தி, வாளிக் கடல் சுமந்து, நின்றேனும் நின்றேன்; நெடு மரம்போல் நின்றேனே! |
என் தாரம் பற்றுண்ண - என் மனைவி (என்னால் பாதுகாக்கப் படாது) மாற்றானால் பற்றப்பட; ஏன்றாயை - (அவளை மீட்பதற்காக) எதிர்த்துப் போரிட்டவன் ஆகிய; சான்றோயை - சான்றோன் ஆகிய உன்னை; கொன்றானும் நின்றான் - கொன்றவனாகிய பகைவனும் உயிரோடு நின்றான்; நீ கொலையுண்டு கிடந்தாய் - நீயோ கொலைப்பட்டுக் கிடக்கிறாய்; வன்தாள் சிலை ஏந்தி - வலிமையான அடிப்பகுதியை உடைய வில்லினைக் (கையில்) ஏந்தி; வாளிக் கடல் சுமந்து - அம்புகளின் தொகுதியைச் சுமந்து கொண்டு; நின்றேனும் நின்றேன் - நின்றவனாகிய நானும் நின்றேன்; நெடுமரம் போல் நின்றேனே - ஓங்கி வளர்ந்த மரம் போல் நின்றேன் என்றவாறு. கொலையுண்டு நீ கிடந்தாய்' என்ற வரியில் சடாயுவின் இடம் நன்றி உணர்வும், மதிப்புணர்வும் நெடுமரம் போல் நின்றேன் என்ற இடத்து நாணமும், பெரு வெறுப்பும் வெளிப்படுமாறு இப்பாடல் அமைந்துள்ளது என்பர். வாளிக்கடல் - அம்புகளின் தொகுதி; கடலளவு கணைகள் இருந்தும் அவை பலனற்று வெறுஞ்சுமையாயின என்று வருந்துகிறான் இராமன். 98 |