சடாயு உயிர்ப்புற்று உரைத்தல் 3502. | அன்னா! பல பலவும் பன்னி அழும்; மயங்கும்; தன் நேர் இலாதானும் தம்பியும் அத் தன்மையனாய்; உன்ன, உணர்வு சிறிது உள் முளைப்ப, புள்ளரசும், இன்னா உயிர்ப்பான், இருவரையும் நோக்கினான். |
தன் நேர் இலாதானும்-தனக்கு ஒப்பு தான் தானேயன்றிப் பிறரில்லை எனும்படியானவனான இராமனும்; அன்னா - அத்தகையதான (சொற்கள்); பலபலவும் பன்னி அழும் - பலவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுவான்; மயங்கும் - அறிவு மயக்கம் கொள்வான்; தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; அத்தன்மையனாய் - அந்த (அழுது மயங்கும்) நிலை உடையவனாக; புள்ளரசும் - கழுகரசன் ஆகிய சடாயுவும்; உள் சிறிது உணர்வு முளைப்ப - உள்ளத்தில் சிறிதளவு உணர்வு தோன்ற; உன்னா - நினைப்பு வரப்பெற்று; இன்னா உயிர்ப்பான் - துன்பத்துடன் மூச்சுவிடுபவனாகி; இருவரையும் நோக்கினான் - (தன்னைச் சூழ்ந்துள்ள இராமலக்குவர்) இருவரையும் கண் திறந்து பார்த்தான். தனக்குத் தானே ஒப்பானவனான இராமனும் தம்பியும் அழுது மயங்கினர். அந்நிலையில் சடாயு சிறிது உணர்வு பெற்றுத் துன்பப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டு அவ்விருவரையும் பார்த்தான். பன்னி - திரும்பத் திரும்பச் சொல்லி, உன்னா - நினைவு பெற்று; 'இன்னா - துன்பம். அன்னா - குறிப்பு வினையாலணையும் பெயர் அன்ன என்பது எதுகை நோக்கி நீண்டது என்பர். 100 |