சடாயு ஆறுதல் கூறுதல் 3507. | ஆற்றலோன் அவ் உரை அறைய, ஆணையால் ஏற்று, உணர்ந்து, எண்ணி, அவ் எருவை வேந்தனும், 'மாற்ற அருந் துயர் இவர் மனக் கொளாவகை தேற்றுதல் நன்று' என, இனைய செப்புவான்: |
ஆற்றலோன் - சொல் ஆற்றல் உடைய இலக்குவன்; ஆணையால் - (இராமனது) கட்டளையினால்; அவ்உரை அறைய - அந்த (வகையான) சொற்களைச் சொல்ல; ஏற்று உணர்ந்து எண்ணி - (அவற்றைக்) கேட்டு உணர்ந்து எண்ணிப் பார்த்து; அவ் எருவை வேந்தனும் - அந்தக் கழுகு அரசனாகிய (சடாயுவும்); மாற்ற அருந்துயர் - நீக்க முடியாத துன்பத்தை; இவர்மனக் கொளா வகை - இவர்கள் மனதில் கொள்ளாத படி; தேற்றுதல் நன்று என - தேறுதல் சொல்வது நல்லது என்று எண்ணி; இனைய செப்புவான் - இத்தகைய சொற்களைச் சொல்பவனானான். ஏற்று உணர்ந்து எண்ணி - மற்றவர் கூறுவதைக் கேட்கும் முறை விளக்கமாக வந்தது அறிக. ஆற்றலோன் - வலிமை உடையவன், அறிவு வலிமை உடையன் எனப் பலவாறு கொள்ளலாம். முன் பாடலில் இலக்குவனின் நிரலே சொல்லும் திறம் சுருக்கிக் கூறப்பட்டதால் இங்குச் சொல்லாற்றல் என்று கொள்வதே சாலப் பொருத்தம் என்க. 105 |