3511.'பொங்கு வெங்கோள் அரா,
     விசும்பு பூத்தன
வெங்கதிர்ச் செல்வனை
     விழுங்கி நீங்குமால்;
அம் கண் மா ஞாலத்தை
     விளக்கும் ஆய் கதிர்த்
திங்களும், ஒரு முறை
     வளரும் தேயுமால்.

    பொங்கு வெங்கோள் அரா - (சினம்) பொங்குகிற கொடிய
கொலைத் தொழிலை உடைய பாம்பாகிய (கேது); விசும்பு பூத்தன -
ஆகாயத்தில் பூத்து விளங்குகிற; வெங்கதிர்ச் செல்வனை - வெப்பக்
கதிர்களைச் செல்வமாகக் கொண்ட கதிரவனை; விழுங்கி நீங்குமால் -
விழுங்கி உமிழும்; அம் கண் மா ஞாலத்தை - இடம் அகன்ற பெரிய
நிலவுலகத்தை; விளக்கும் - தன் ஒளியால் விளங்கச் செய்கிற; ஆய்கதிர்த்
திங்களும் -
சிறந்த ஒளிக்கற்றைகளை உடைய நிலவும்; ஒரு முறை
வளரும் தேயும் -
(மாதந்தோறும்) ஒரு முறை வளர்ந்து, ஒரு முறை
தேய்தலும் செய்யும்.

     கதிரவனைக் கோள் அராத் தீண்டி மறைத்தலும், நிலவு வளர்ந்து
தேய்வதும் விதியின் பயன் என்றவாறு. கதிரவனை அராத் தீண்டுதற்குக்
காரணமாகப் புராணக் கதையைக் குறிப்பிடுவர். கோள் அரா - குறித்த
இலக்கைக் கொல்வதில் தவறாத பாம்பு, கோள் - முதல் நிலை நீண்ட
தொழிற் பெயர். மாஞாலம்- உரிச்சொல் தொடர். ஆல் இரண்டும் அசை. 109