3512.'அந்தரம் வருதலும்,
     அனைய தீர்தலும்,
சுந்தரத் தோளினிர்!
     தொன்மை நீரவால்;
மந்திர இமையவர்-குருவின்
     வாய் மொழி
இந்திரன் உற்றன
     எண்ண ஒண்ணுமோ?

    சுந்தரத் தோளினிர் - அழகிய தோள்களை உடையவர்களே;
அந்தரம் வருதலும் - (ஒருவனுக்குத்) தீங்குகள் வந்து சேர்வதும்;
அனைய தீர்தலும் - அவை நீங்குவதும்; தொன்மை நீரவால் - தொன்று
தொட்டு வந்தமைகிற ஊழ்வினையின் தன்மையவாகும்; இமையவர் மந்திர
குருவின் -
தேவர்களுடைய மந்திரவலிமை மிக்க குருவாகிய பிரகசுபதியின்;
வாய்மொழி - வாயில் இருந்து வந்த சாபச் சொற்களால்; இந்திரன்
உற்றன-
தேவர் தலைவனாகிய இந்திரன் அடைந்த துன்பங்களை; எண்ண
ஒண்ணுமோ -
எண்ணிப் பார்க்க முடியுமோ என்றபடி (முடியாது என்பது
கருத்து)

     தொன்று தொட்டு வருகின்ற ஊழ்வினையின் பயனால் தான்
ஒருவனுக்குத் துன்பங்கள் வந்து சேருகின்றன. இதை விளக்க இந்திரன்
பட்ட துன்பங்களைக் கூறும் புராணச் செய்தி கூறப்படுகிறது. அந்தரம் -
துன்பம், நீங்கு, நீரவால் - தன்மையவாம் அனைய, உற்றன -
வினையாலணையும் பெயர்கள். இமையவர் குரு - பிரகஸ்பதி.          110