3513.'தடைக்க அரும் பெரு வலிச்
     சம்பரப் பெயர்க்
கடைத் தொழில்
     அவுணனால், குலிசக்கையினான்
படைத்தனன் பழி; அது,
     பகழி வில் வலாய்!
துடைத்தனன் நுந்தை, தன்
     குவவுத் தோளினால்.

    பகழி வில் வலாய் - அம்புகளை விடும் வில் தொழில் ஆற்றலில்
வல்லவனே!; தடைக்க அரும் பெருவலி - தடுப்பதற்கு முடியாத மிக்க
வலிமை உடைய; சம்பரப் பெயர் - சம்பரன் என்ற பெயர் உடைய;
கடைத் தொழில் அவுணனால் - இழி தொழிலைச் செய்யும் அவுணனால்;
குலிசக்கையினான் - வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய இந்திரன்; பழி
படைத்தனன் -
(தோல்வி அடைந்து ஆட்சியை இழத்தலாகிய) பழியை
அடைந்தான்; அது - அப்பழியை; நுந்தை - உன் தந்தையாகிய தசரதன்;
தன் குவவுத் தோளினால் - தன் திரண்ட தோள்களின் வலிமையால்;
துடைத்தனன் - நீக்கினான்.

     இந்திரன் சம்பரன் என்ற அசுரனால் அடைந்த பழியை உன்
தந்தையாகிய தசரதன் தன் தோள் வலிமையால் போக்கினான் என்பது
கருத்து. தடைக்க - தடுக்க, கடைத் தொழில் - கீழான தொழில், குலிசம் -
வச்சிராயுதம், நுந்தை - உன் தந்தை தசரதன், குவவு - திரட்சி.         111