3515.'வடுக் கண், வார் கூந்தலாளை,
     இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து,
     எனது ஆற்றல்கொண்டு
தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து,
     அரன் தந்த வாளால்
படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது
     இன்று பட்டது' என்றான்.

    வடுக்கண் - மாவடுவின் பிளந்தது போன்ற கண்களையும்; வார்
கூந்தலாளை -
நீண்ட கூந்தலையும் உடைய சீதையை; இராவணன்
மண்ணினோடும் -
இராவணன் நிலத்தோடு; எடுத்தனன் ஏகுவானை -
எடுத்துக் கொண்டு செல்லும் போது அவனை; எதிர்ந்து - (நான்)
எதிர்ப்பட்டு; எனது ஆற்றல் கொண்டு - எனது வலிமையின் துணை
கொண்டு; ஆவது எல்லாம் தடுத்தனென் - ஆன மட்டும் தடுக்க
முனைந்தேன்; தவத்து அரன் தந்த வாளால் - (இறுதியில் அவன்) தன்
தவம் கருதிச் சிவபிரான் கொடுத்த (சந்திரகாசம் என்னும்) வாளினால்;
படுத்தனன் - (என்னை) வெட்டி வீழ்த்தினான்; இங்கு வீழ்ந்தேன் -
இவ்விடத்தில் விழுந்து விட்டேன்; இது இன்று பட்டது - இச் செயல் இன்று
நடந்தது; என்றான் - என்று (சடாயு இராமனிடம்) கூறினான்.

     வடு - மாவடு. வார் - நீண்ட; வார் கூந்தல் - பண்புத் தொகை.
கூந்தலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர். எடுத்தனன் - முற்றெச்சம்,
ஆவது எல்லாம் - ஒருமை பன்மை மயக்கம்.                      113