இராமன் சீற்றம்

3516. கூறின மாற்றம் சென்று
     செவித்தலம் குறுகாமுன்னம்,
ஊறின உதிரம், செங் கண்;
     உயிர்த்தன, உயிர்ப்புச் செந் தீ;
ஏறின புருவம் மேல்மேல்; இரிந்தன
     சுடர்கள் எங்கும்;
கீறினது அண்டகோளம்; கிழிந்தன
     கிரிகள் எல்லாம்.

    கூறின மாற்றம் - (சடாயு) கூறிய சொற்கள்; சென்று செவித் தலம்
குறுகாமுன்னம் -
சென்று (இராமனது) காதினிடத்துச் சேருவதற்கு முன்பு;
செங்கண் உதிரம் ஊறின - (முன்பே) சிவந்த கண்களில் குருதி ஊறிச்
சொரிந்தன; உயிர்ப்புச் செந்தீ உயிர்த்தன - பெருமூச்சாகிய சிவந்த தீ
வெளிப்பட்டன; புருவம் மேல் மேல் ஏறின - புருவங்கள் மேலும் மேலும்
மேலே ஏறின; சுடர்கள் எங்கும் இரிந்தன - (கதிரவன் முதலிய) சுடர்கள்
எங்கும் அஞ்சி ஓடின; அண்ட கோளம் கீறினது - அண்டமாகிய
உருண்டை பிளவுபட்டது; கிரிகள் எல்லாம் கிழிந்தன - மலைகள் எல்லாம்
உடைபட்டன.

     செம்பொருளே சினந்தால் சிதறாவோ எவையும் எங்கும்! கவிதை நெறி
அறிந்தோர் இதனை வெறும் உயர்வு நவிற்சி எனக் கொண்டமையார்.    114