3518. | 'குறித்த வெங் கோபம் யார்மேல் கோளுறும்கொல்?' என்று அஞ்சி, வெறித்துநின்று, உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை, பொறிப் பிதிர் படலை, செந் தீப் புகையொடும் பொடிப்ப 'பொம்' என்று எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான்: |
குறித்த வெங்கோபம் - (இராமன் மனத்தில்) கொண்ட கொடிய சினம்; யார் மேல் கோளுறுங் கொல் - யாவர் மேல் செலுத்தப்படும் கொல்; என்று அஞ்சி - என்று எண்ணி அஞ்சி; உலகம் எல்லாம் - உலகங்கள் எல்லாம்; வெறித்து நின்று - திகைப்படைந்து நின்று; விம்முறுகின்ற வேலை - கலங்குகிற நேரத்தில்; பொறிப் பிதிர் படலை - பொறிகளின் தொகுதி; செந்தீப் புகையொடும் பொடிப்ப - சிவந்த நெருப்பு புகையுடன் தோன்றும் படி; எறிப்பது ஓர் முறுவல் பொம் என்று தோன்ற - ஒளி விடுவதான ஒப்பற்ற புன்சிரிப்பு பொம் என்று தோன்ற; இராமனும் இயம்பல் உற்றான் - இராமனும் சில கூறத் தொடங்கினான். இராமனது சினம் யார் மேல் செல்லுமோ என அனைத்துலகும் திகைத்து நின்ற நிலையில், செந்தீப் புகையொடு எழ அவன் வெகுளி கொண்டு புன்முறுவல் பூத்துக் கூறலானான் என்பதாம். கோளுறுதல் - செல்லுதல். வெறித்து - திகைத்து. படலை - கொழுந்துத் தொகுதி. பொம் - ஒலிக் குறிப்பு; பிதிர்தல் - சிதறல். கொல் - ஐயப் பொருள் தருவதோர் இடைச்சொல். உலகம் - இடவாகுபெயர். 116 |