இராமன் சீற்றத்தைச் சடாயு தணித்தல்

3523. இவ் வழி நிகழும் வேலை, எருவைகட்கு
     இறைவன், 'யாதும்,
செவ்வியோய்! முனியல்; வாழி!
     தேவரும் முனிவர்தாமும்,
வெவ் வலி வீர! நின்னால் வெல்லும்
     என்று ஏமுற்று உய்வார்
எவ் வலி கொண்டு வெல்வார், இராவணன்
     செயலை?' என்றான்.

    இவ்வழி நிகழும் வேலை - இவ்வாறு நடக்கும் பொழுது; எருவை
கட்கு இறைவன் -
கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு; செவ்வி யோய் -
நன்மைக் குணங்கள் கொண்டவனே!; வாழி - வாழ்வாயாக; யாதும்
முனியல் -
சிறிதளவு கூடச் சினம் கொள்ளாதே; வெவ்வலிவீர -
வெலற்கரு வலி படைத்த வீரனே; தேவரும் முனிவர் தாமும் -
தேவர்களும் முனிவர்களும்; நின்னால் வெல்லும் என்று - உன்னைக்
கொண்டு (தம் பகைவர்களாகிய அரக்கர்களை) வெல்வோம் என்று
(எண்ணிக் கொண்டு); ஏமுற்று உய்வார் - மகிழ்ச்சியுடன் உயிர்
வாழ்கிறார்கள்; இராவணன் செயலை - (அப்படிப்பட்டவர்கள்) இராவணன்
செய்த கொடுமையான செயலை; எவ்வலி கொண்டு வெல்வார் - எந்த
வலிமையைக் கொண்டு (தடுத்து) வெற்றி பெறுவார்கள்; என்றான் - என்று
கூறினான்.

     ஏமுற்று - பாதுகாவலால் மகிழ்ந்து நிற்றல்,                    121