3528. | புயல் நிற வண்ணன், ஆண்டு, அப் புண்ணியன் புகன்ற சொல்லை, 'தயரதன் பணி ஈது' என்ன, சிந்தையில் தழுவிநின்றான்; 'அயல் இனி முனிவது என்னை? அரக்கரை வருக்கம் தீர்க்கும் செயல் இனிச் செயல்' என்று எண்ணி, கண்ணிய சீற்றம் தீர்ந்தான். |
புயல் நிறவண்ணன் - கரு மேகத்தின் நிறம் போன்ற நிறத்தை உடைய இராமன்; அப்புண்ணியன் ஆண்டு புகன்ற சொல்லை - அப் புண்ணியனாகிய சடாயு அப்பொழுது சொன்ன சொற்களை; ஈது தயரதன் பணி என்ன - இது தயரத மன்னனின் கட்டளையாகும் என்று; சிந்தையில் தழுவி நின்றான் - மனத்தில் (முழுதும்) ஏற்று நின்றவனாய்; இனி அயல் முனிவது என்னை - இனிமேல் பிறரைச் சினத்தலால் யாது பயன்?; அரக்கரை தம் வருக்கம் தீர்க்கும் - அரக்கர்களின் இனத்தை (முழுதுமாக) அழிக்கும்; செயல் இனிச் செயல் - செயலே இனிச் செய்ய வேண்டிய செயல்; என்று எண்ணி - என்று மனத்தில் சிந்தித்துப் பார்த்து; கண்ணிய சீற்றம் தீர்ந்தான் - மனத்தில் தோன்றிய சினத்தை விட்டான். தந்தை சொல் தலை மேற் கொண்ட இராமன், சடாயுவின் சொற்களைத் தந்தை சொல்லாகவே ஏற்று, அரக்கரை வேரோடு அழித்தலே செயத்தக்கது எனத் தேர்ந்து சீற்றம் விட்டனன். புயல் - மேகம், பண்பு குறித்ததாகவும் கொள்ளலாம். அவ்வாறாயின் மேகம் போல் இன்னார் இனியார் என்னாது அருள் செய்பவன் இராமன் எனக் கொள்க. ஆண்டு - அப்பொழுது; பணி - கட்டளை அல்லது ஆணை. 126 |