இராமன் தளர, இளையவன் தேற்றுதல் 3532. | 'அறம்தலை நின்றிலாத அரக்கனின், ஆண்மை தீர்ந்தேன்; துறந்தனென், தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரை? சொல்லாய்; பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால், பெற்ற தாதை இறந்தனன்; இருந்துளேன் யான்; என் செய்கேன்? இளவல்!' என்றான். |
இளவல் - இளைய தம்பியே!; அறம் தலை நின்றிலாத அரக்கனின்- அறவழியில் நிலைத்து நிற்றல் இல்லாத அரக்கனால்; ஆண்மை தீர்ந்தேன் - ஆண்மையை இழந்தவனாகிய (யான்); துறந்தனென் தவம் செய்கேனோ - முற்றும் துறந்தவனாய்த் தவம் செய்வேனோ?; உயிரை துறப்பெனோ - உயிரை விட்டு விடுவேனோ?; சொல்லாய் - (இரண்டில் தக்கது எது என நீ) சொல்வாய்; பெற்று நின்ற பெற்றியால் - (என்னை மகனாகப்) பெற்று நின்ற தன்மையால்; பெற்ற தாதை இறந்தனன் - (என்னைப்) பெற்ற தயரதனும் (ஆரண்யத்தில் பெற்ற தந்தையாகிய சடாயுவும்) இறந்து போனான்; பிறந்தனென் யான் இருந்துளேன் - (மகனாகப்) பிறந்தவனாகிய நான் (இன்னும் உயிர் தாங்கி) இருக்கிறேன்; என் செய்கேன் - எதைச் செய்யக் கடவேன்; என்றான் - என்று இராமன் கூறினான். அறந்தலை நின்றிலாத அரக்கனின் வஞ்சனையால் பழியைப் பெற்று, பெற்ற தந்தையாகிய தயரதனையும், உற்ற தந்தையாகிய சடாயுவையும் இழந்து, மகனாகிய நான் யாது செய்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறேன் என்றவாறு. நின்றிலாத - எதிர்மறைப் பெயரெச்சம். தீர்ந்தேன், துறந்தனென் - முற்றெச்சங்கள். 130 |