இருவரும் சடாயுவுக்கு இறுதிக் கடன் செய்தல்

3535. அவ் வழி இளவல் கூற, அறிவனும்
     அயர்வு நீங்கி,
'இவ் வழி இனைய எண்ணின்
     ஏழைமைப்பாலது' என்னா,
வெவ் வழி பொழியும் கண்ணீர்
     விலக்கினன், 'விளிந்த தாதை
செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்;
     சிறுவ!' என்றான்.

    இளவல் - இளவலாகிய இலக்குவன்; அவ்வழி கூற - அவ்வாறு
(எடுத்துக்) கூற; அறிவனும் - முற்றுணர்வுடையவனாகிய இராமனும்;
இவ்வழி - இவ்விடத்தில்; இனைய எண்ணின் - இத்தன்மையனவான
எண்ணங்களை எண்ணுவது; ஏழைமைப் பாலது என்னா - அறியாமையின்
பாற்பட்டது என்று எண்ணி; அயர்வு நீங்கி - மனத்துன்பம் நீக்கி;
வெவ்வழி பொழியும் கண்ணீர் - கொடுந்துன்பத்தினால் வழியும்
கண்ணீரை; விலக்கினன் - துடைத்தவனாய்; சிறுவ - (இலக்குவனை) தம்பி,
(என விளித்து); விளிந்த தாதை - இறந்த தந்தையாகிய சடாயுவுக்கு;
செவ்வழி உரிமையாவும் - செய்ய வேண்டிய (இறுதிக்) கடமைகளை
எல்லாம்; திருத்துவம் - திருத்தமாக (முழுமையுறச்); செய்வோம்; என்றான்-
என்று கூறினான்.

     இளவல் கூறியதைக் கேட்ட இராமன் மனம் தேறி, இவ்வாறு
சிந்திப்பது அறிவில்லாமையின் பாற்பட்டது என்று உள்ளத்தில் கொண்டு,
இலக்குவனைப் பார்த்து, 'இறந்த தந்தையாகிய சடாயுவுக்கு உரிய ஈமச்
சடங்குகளைக் குறைவறச் செய்வோம்' என்றான். உரிமை - கடன்கள்,
சடங்குகள்.                                                133