இருவரும் சடாயுவுக்கு இறுதிக் கடன் செய்தல் 3535. | அவ் வழி இளவல் கூற, அறிவனும் அயர்வு நீங்கி, 'இவ் வழி இனைய எண்ணின் ஏழைமைப்பாலது' என்னா, வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன், 'விளிந்த தாதை செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்; சிறுவ!' என்றான். |
இளவல் - இளவலாகிய இலக்குவன்; அவ்வழி கூற - அவ்வாறு (எடுத்துக்) கூற; அறிவனும் - முற்றுணர்வுடையவனாகிய இராமனும்; இவ்வழி - இவ்விடத்தில்; இனைய எண்ணின் - இத்தன்மையனவான எண்ணங்களை எண்ணுவது; ஏழைமைப் பாலது என்னா - அறியாமையின் பாற்பட்டது என்று எண்ணி; அயர்வு நீங்கி - மனத்துன்பம் நீக்கி; வெவ்வழி பொழியும் கண்ணீர் - கொடுந்துன்பத்தினால் வழியும் கண்ணீரை; விலக்கினன் - துடைத்தவனாய்; சிறுவ - (இலக்குவனை) தம்பி, (என விளித்து); விளிந்த தாதை - இறந்த தந்தையாகிய சடாயுவுக்கு; செவ்வழி உரிமையாவும் - செய்ய வேண்டிய (இறுதிக்) கடமைகளை எல்லாம்; திருத்துவம் - திருத்தமாக (முழுமையுறச்); செய்வோம்; என்றான்- என்று கூறினான். இளவல் கூறியதைக் கேட்ட இராமன் மனம் தேறி, இவ்வாறு சிந்திப்பது அறிவில்லாமையின் பாற்பட்டது என்று உள்ளத்தில் கொண்டு, இலக்குவனைப் பார்த்து, 'இறந்த தந்தையாகிய சடாயுவுக்கு உரிய ஈமச் சடங்குகளைக் குறைவறச் செய்வோம்' என்றான். உரிமை - கடன்கள், சடங்குகள். 133 |