3537. | ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்; சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டி, கடன் முறை கடவாவண்ணம் நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான். |
நிரம்பும் நல்நூல் மந்திர நெறியின் வல்லான் - நிறைந்த நல்ல நூல்களாகிய சாத்திரங்களின் முறையில் வல்லவனாகிய இராமன்; நீரும் சாந்தொடு மலரும் சொரிந்தனன் - நீரையும் சந்தனத்தையும் மலரையும் (உரிய முறைப்படி) பயன்படுத்திச் (சடாயுவின் உடலுக்கு இட்டு); இருகை தன்னால் ஏந்தினன் - அவ்வுடலைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து; ஈமம் தன்மேல் ஏற்றினன் - (விறகுகள் அடுக்கப்பட்ட) ஈம மணல் மேடையின் மேல் ஏற்றி; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டி - தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து; கடன் முறை கடவா வண்ணம் - செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாதவாறு; நேர்ந்தனன் - செய்தான். சடாயுவின் உடலுக்கு, நீரும், சந்தனமும், மலரும் இட்டு அலங்கரித்து, இரு கையில் ஏந்தி, ஈம மணல் மேடையில் ஏற்றித் தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து, செய்ய வேண்டியவற்றை முறை தவறாது இராமன் செய்தனன் என்க. சாரல் - பக்கம், கஞலுதல் - நெருங்குதல். 135 |