3538. | தளிர்த்தன கிளர்ந்த மேனித் தாமரைக் கெழுமு செம்பூத் துளித்தன அனைய என்னத் துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் குளித்தனன், கொண்டல், ஆற்று; குளித்தபின், கொண்ட நல் நீர் அளித்தனன்-அரக்கர்ச் செற்ற சீற்றத்தான்-அவலம் தீர்ந்தான். |
அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் - அரக்கர்களை அழிக்க வேண்டும் என்ற சினத்தினால்; அவலம் தீர்ந்தான் - (சீதையைப் பிரிந்த) துன்பத்தை நீக்கியவனாகிய இராமன்; தளிர்த்தன கிளர்ந்த மேனி - தளிரின் நிறத்தன்மை உடைய செழிப்பொடு கூடிய (தன்) உடலில்; தாமரைக் கெழுமு செம்பூ - தாமரையின் செழிந்த சிவந்த மலர்; துளித்தன அனைய என்ன - (தேன்) துளிகளைத் துளிர்த்ததை ஒத்தது என்னுமாறு; துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் - துளியாக வடிகிற கண்ணீர்ப் பெருக்கு உடையவனாய்; கொண்டல் ஆற்றுக் குளித்தனன் - மேகம் ஆற்றில் படிவதைப் போல (ஆற்றில்) குளித்தான்; குளித்த பின் - குளித்து முடித்த பிறகு; கொண்ட நல் நீர் அளித்தனன் - (தன் கையில் கொண்ட) நல்ல நீரை நீர்க்கடனாகக் கொடுத்தான். இராமன் கண்களுக்குத் தாமரை மலரும் அவன் கண்களில் இருந்து வழியும் கண்ணீருக்கு அம்மலரில் இருந்து வெளிப்படும் தேனும் உவமைகளாயின. இராமன் ஆற்றில் மூழ்கிக் குளித்தது, ஆற்றில் மேகம் படிந்தது போன்றது என்றவாறு. கொண்டல் - மேகம் போன்ற இராமன், துள்ளி - விரித்தல் விகாரம். 136 |