3539. | மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ் காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின; களித்த போலாம்; பூட்டிய கைகளால், அப்புள்ளினுக்கு அரசை, 'கொள்க' என்று, ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! |
விரிஞ்சனே முதல - பிரமனை முதலாகக் கொண்ட; மேல் கீழ் காட்டிய உயிர்கள் எல்லாம் - உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட உயிரினங்களெல்லாம்; அருந்தின களித்த போலாம் - (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தினவையாய் மகிழ்ந்தவை போலாயின; அப்புள்ளினுக்கு அரசை - அந்தப் பறவைகளுக்கு அரசனாகிய சடாயுவை; 'கொள்க' என்று - '(நீ) ஏற்றுக் கொள்க' என்று கூறி; பூட்டிய கைகளால் - (தன்) இணைத்த கைகளால்; ஊட்டிய நல்நீர் - உண்பித்த (நீர்க்கடனுக்கு உரிய) நல்ல நீர்; ஐயன் உண்ட நீர் ஒத்தது - (அனைத்துயிர்க்கும்) தலைவன் ஆகிய திருமால் (தானே) உட்கொண்ட நீரைப் போன்றதாயிற்று; மீட்டு இனி உரைப்பது என்னே? - வேறு கூற என்ன உள்ளது. (என்றவாறு). சடாயுவுக்கு இராமன் நீர்க்கடன் செய்தபோது சடாயுவின் உயிரன்றி அனைத்து உயிர்களும் அதனை உண்டு மகிழ்ந்தன. இது திருமாலே நீருண்டது போன்றது என்றார். சொரூபி உண்டது சொரூபங்கள் உண்டன போல் ஆனது என்றவாறு. விரிஞ்சன் - பிரமன், பூட்டிய கைகள் - சேர வைத்த கைகள், நல்நீர் - ஐயனே ஊட்டியதால் நல்நீர் எனப்பட்டது. காட்டிய - பெயரெச்சம், அருந்தின - முற்றெச்சம், அன்று, ஏ - அசைகள் ஏகாரம் தேற்றம்; அன்றே தேற்றேகாரமாகக் கொண்டும் பொருள் கொள்ளலாம். 137 |