3539. மீட்டு இனி உரைப்பது என்னே?
     விரிஞ்சனே முதல மேல், கீழ்
காட்டிய உயிர்கள் எல்லாம்
     அருந்தின; களித்த போலாம்;
பூட்டிய கைகளால், அப்புள்ளினுக்கு
     அரசை, 'கொள்க' என்று,
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட
     நீர் ஒத்தது அன்றே!

    விரிஞ்சனே முதல - பிரமனை முதலாகக் கொண்ட; மேல் கீழ்
காட்டிய உயிர்கள் எல்லாம் -
உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக்
காட்டப் பட்ட உயிரினங்களெல்லாம்; அருந்தின களித்த போலாம் -
(இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தினவையாய்
மகிழ்ந்தவை போலாயின; அப்புள்ளினுக்கு அரசை - அந்தப்
பறவைகளுக்கு அரசனாகிய சடாயுவை; 'கொள்க' என்று - '(நீ) ஏற்றுக்
கொள்க' என்று கூறி; பூட்டிய கைகளால் - (தன்) இணைத்த கைகளால்;
ஊட்டிய நல்நீர் - உண்பித்த (நீர்க்கடனுக்கு உரிய) நல்ல நீர்; ஐயன்
உண்ட நீர் ஒத்தது -
(அனைத்துயிர்க்கும்) தலைவன் ஆகிய திருமால்
(தானே) உட்கொண்ட நீரைப் போன்றதாயிற்று; மீட்டு இனி உரைப்பது
என்னே? -
வேறு கூற என்ன உள்ளது. (என்றவாறு).

     சடாயுவுக்கு இராமன் நீர்க்கடன் செய்தபோது சடாயுவின் உயிரன்றி
அனைத்து உயிர்களும் அதனை உண்டு மகிழ்ந்தன. இது திருமாலே
நீருண்டது போன்றது என்றார். சொரூபி உண்டது சொரூபங்கள் உண்டன
போல் ஆனது என்றவாறு. விரிஞ்சன் - பிரமன், பூட்டிய கைகள் - சேர
வைத்த கைகள், நல்நீர் - ஐயனே ஊட்டியதால் நல்நீர் எனப்பட்டது.
காட்டிய - பெயரெச்சம், அருந்தின - முற்றெச்சம், அன்று, ஏ - அசைகள்
ஏகாரம் தேற்றம்; அன்றே தேற்றேகாரமாகக் கொண்டும் பொருள்
கொள்ளலாம்.                                                137