உறக்கம் இன்றித் துயரால் நலிதல் 3542. | தேன் உக அருவி சிந்தி, தெருமரல் உறுவ போல, கானமும், மலையும், எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல், மானமும் சினமும் தாதை மரணமும், மைந்தர் சிந்தை, ஞானமும் துயரும் தம்முள் மலைந்தென, நலிந்த அன்றே. |
கானமும் மலையும் எல்லாம் - காடுகளும் மலைகளும் ஆகிய எல்லாமும்; தெருமரல் உறுவ போல - (இராமலக்குவர் துன்பத்துக்கு) மனச் சுழற்சி அடைபவைபோல; தேன் உக அருவி சிந்தி - தேனினையும் அருவி நீரினையும் ஒழுக விடுவதால்; கண்ணின் நீர் உகுக்கும் - (அவை) கண்ணீர் வெளிப்படுவது போல் வெளிப்படும்; கங்குல் - அன்று இரவிலே; மானமும் - (சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட) அவமானமும்; சினமும் - அந்த (இராவணன் மீது தோன்றிய) சினமும்; தாதை மரணமும் - தந்தையாகிய சடாயுவின் மரணத்தால் (ஏற்பட்ட மனத் துயரமும்); ஞானமும் - நல்லறிவும்; துயரமும் - துன்பமும்; தம்முள் மலைந்தென - தங்களுக்குள் (முரண்பட்டுப்) போரிட்டது போல; மைந்தர் சிந்தை - வலிமையுடைய இராமலக்குவர்களுடைய மனத்தில்; நலிந்த - தாக்கி வருத்தின. காடும் மலையும் இராமலக்குவர் துன்பத்துக்கு வருந்துபவை போல் தேனையும் அருவி நீரையும் சொரிந்தன. அவர்களுடைய மனத்தில் அவமானமும், சினமும், துயரமும் மோதியது. நல்லறிவும் துன்பமும் தம்முள் மாறுபட்டுப் போர் புரிவதைப் போல் அவர்களை வருத்தின. தெருமரல் - மனச் சுழற்சி, "அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" என்பர் தொல்காப்பியனார் (தொல் சொல் உரி 13) கங்குல் - இரவு, மானம் - அவமானம், ஞானம் - தூய அறிவு, அன்று, ஏ - அசைகள் 2 |