3548. இடம்படு மானத் துன்பம், இருள்தர,
     எண்ணின் தீர்ந்தான்
விடம் பரந்தனையது ஆய வெண்
     நிலா வெதுப்ப, வீரன்,
படம் பரந்தனைய அல்குல், பால்
     பரந்தனைய இன் சொல், 
தடம் பெருங் கண்ணினாள்தன்
     தனிமையை நினையலுற்றான்.

    வீரன் - வீரனாகிய இராமன்; விடம் பரந்தனையது ஆய - நஞ்சு
(எங்கும்) பரந்தது போன்றதாகிய; வெண் நிலா வெதுப்ப - வெள்ளிய
நிலவு (ஒளியானது) (தன்னை) வருத்தவும்; இடம்படு மானத் துன்பம்
இருள்தர -
(தனக்கு ஏற்பட்ட) பெரிய அவமானமாகிய துன்பம் (சீதையை
இராவணன் கவர்ந்து சென்றது) அறிவைக் கெடுக்கவும்; எண்ணின்
தீர்ந்தான் -
மற்ற எண்ணங்கள் நீங்கினவனாகி; படம் பரந்தனைய
அல்குல் -
பாம்பின் படம் விரிந்தது போன்ற அல்குலினையும்; பால்
பரந்தனைய இன் சொல் -
பாலில் (கலந்து) பரந்துள்ள இனிமை போன்ற
இனிய சொற்களையும்; தடம் பெருங் கண்ணினாள் - (காதளவோடி) நீட்சி
அமைந்த கண்களையும் உடையவளாகிய; தன் தனிமையை
நினையலுற்றான் -
(சீதை) தன் தனிமையைப் பற்றி எண்ணுபவன் ஆனான்.

     நஞ்சு பரந்தது போல் எங்கும் நிலவு ஒளி பரவித் தன்னை
வருத்துதலால் இராமன் மானத் துன்பம் அறிவை அழிக்க வேறு ஒரு
நினைவும் இன்றிச் சீதையின் தனிமை குறித்து எண்ணத் தொடங்கினான்.   8