இராமன் சீதையை எண்ணி வருந்துதல்

கலிவிருத்தம்

3549. மடித்த வாயன்;
     வயங்கும் உயிர்ப்பினன்,
துடித்து வீங்கி,
     ஒடுங்குறு தோளினன்;
பொடித்த தண் தளிர்ப்
     பூவொடு மால் கரி
ஒடித்த கொம்பு அனையாள்
     திறத்து உன்னுவான்:

    மடித்த வாயன் - (இராமன்) பிரிவுத் துயராலும், (இராவணன் மேல்
கொண்ட) சினத்தாலும், கடித்த உதட்டினை உடையவனாய்; வயங்கும்
உயிர்ப்பினன் -
வெளிப்பட்டு விளங்குகிற பெருமூச்சை உடையவனாய்;
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் - (மனத் துன்பத்தால்) துடித்து,
(இராவணனை அழிக்க வேண்டும் என்பதால்) பூரிப்பு அடைந்து, (செய்வது
அறியாமையால்) தளர்ந்த தன்மை அடைந்த தோள்களை உடையவனாய்;
மால் கரி ஒடித்த - மதயானை ஒடித்த (இராவணன்); பொடித்த தண்
தளிர்ப் பூவொடு -
சிறிதாக வெளிப்பட்ட குளிர்ந்த இலைகளையும்
பூக்களையும் உடைய; கொம்பு அனையாள் திறத்து - கொம்பினை
ஒத்தவளாகிய சீதையின் தன்மை பற்றி; உன்னுவான் - நினைத்தான்.

     சினமும் துயரும், பெருமூச்சும் கொண்ட இராமன், வாய் மடித்து,
பெருமூச்சு விட்டு, தோள் துடித்து ஓங்கி ஒடுங்கச் சீதையைப் பற்றி
எண்ணத் தொடங்கினான் என்க. மால்கரி - இராவணனுக்கும், கொம்பு -
சீதைக்கும், தளிரும் பூவும் - அவளது மேனி நிறத்துக்கும் உவமைகளாம்.  9