3551. தன் நினைந்திலள்
     என்பது சாலுமோ -
மின் நினைந்த
     விலங்கும் எயிற்றினான்,
"நில் நில்" என்று நெருங்கிய
     போது அவள்
என் நினைந்தனளோ?'
     என எண்ணுமால்.

    மின் நினைந்த விலங்கும் எயிற்றினான் - மின்னலைப் போல
இடை விலகியுள்ள பற்களை உடைய இராவணன்; நில் நில் என்று
நெருங்கிய போது -
நில் நில் என்று கூறிக் கொண்டு நெருங்கிய போது;
அவள் தன் நினைந்திலள் என்பது சாலுமோ - அந்தச் சீதை என்னை
நினைக்கவில்லை என்று கூறுவது பொருந்துமோ?; என் நினைந்தனளோ -
என்னைப் பற்றி என்னென்ன நினைத்தாளோ?; என எண்ணும் - என்று
இராமன் எண்ணினான்.

     'இராவணன் தன்னை நெருங்கிய போது சீதை என்னை
நினைக்கவில்லை என எண்ணுவது பொருந்துமோ? அவள் என்னென்ன
நினைத்தாளோ' என்று இராமன் எண்ணினான். தன் என்றது ஈண்டு
இராமனை; இதைச் சீதையைக் குறிப்பதாகக் கொண்டும் உரை கூறலாம்.
சாலுதல் - பொருந்துதல், என் நினைத்தனளோ - தன்னைக் காக்க
வேண்டிய காலத்துக் காக்க வராமையால் மாரீசனின் மாயக் குரல் கேட்டு
முன்னமே மனம் கலங்கி இருந்த சீதை யாது கருதினாளோ என்றபடி.
விலங்குதல் - இடைவெளியுடன் அமைதல். நில் நில் - அடுக்கு சினக்
குறிப்பினது. ஆல் - ஈற்றசை.                                    11