3555. கூதிர் வாடை வெங்
     கூற்றினை நோக்கினன்;
'வேத வேள்வி
     விதிமுறை மேவிய
சீதை என்வயின்
     தீர்ந்தனளோ?' எனும் -
போதகம் எனப் 'பொம்'
     என் உயிர்ப்பினான்.

    போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான் - யானைக் கன்று
போலப் பொம் என்ற ஒலியுடன் பெருமூச்சு விடுபவனாகிய (இராமன்);
கூதிர் வாடை வெங் கூற்றினை நோக்கினன் - கூதிர் கால வாடைக்
காற்றாகிய கொடுமையான யமனை நோக்கிய காரணத்தால்; 'வேத விதிமுறை
வேள்வி மேவிய -
வேதங்களில் கூறப்பட்டுள்ள விதிகளின் முறைப்படி
(செய்த) மணச் சடங்கினால் (யான்) மணந்து பெற்ற; சீதை என்வயின்
தீர்ந்தனளோ -
சீதை என்னிடத்தில் இருந்து நீங்கி விட்டாளோ?; எனும் -
என்பான்.

     சீதையின் பிரிவினைக் கூதிர்க் கால வாடைக் காற்று உணர்த்த
உணர்ந்த இராமன். அறிவுத் தடுமாற்றத்தால் 'சீதை என்னை விட்டு நீங்கி
விட்டாளோ' என்றான் - என்பதாம். வாடை - வடக்கில் இருந்து வீசும்
காற்று. வேள்வி - இங்கே திருமணச் சடங்கு, போதகம் - யானைக் கன்று.
பொம் - ஒலிக்குறிப்பு. வாடை வெங் கூற்று - உருவகம். நோக்கினன் -
முற்றெச்சம்.                                                  15