3556.'நின்று பல் உயிர் காத்தற்கு
     நேர்ந்த யான்,
என் துணைக் குல மங்கை
     ஓர் ஏந்திழை-
தன் துயர்க்குத் தகவு
     இலென் ஆயினேன்;
நன்று நன்று, என்
     வலி!' என, நாணுமால்.

    'நின்று - (அரக்கர்களை எதிர்த்து) நின்று; பல் உயிர் காத்தற்கு
நேர்ந்த யான் -
(உலகில் உள்ள) எல்லா உயிர்களையும் காப்பாற்றுவதற்கு
உடன்பட்ட நான்; ஓர் ஏந்திழை என் துணைக் குலமங்கை தன் - சிறந்த
அணிகலன்களை அணிந்த என் மனைவியாகிய ஒரு குலப் பெண்ணினது;
துயர்க்குத் தகவு இலென் ஆயினேன் - துன்பத்தை நீக்குவதற்குத்
தகுதியுடையவன் அல்லேன் ஆயினேன்; என் வலி நன்று நன்று - என்
வலிமை மிக நன்றாய் இருக்கிறது; என நாணும் - என்று (எண்ணி)
நாணமடைவான்.

     உலகெலாம் காக்க ஒருப்பட்ட நான் ஒரு பெண்ணின் துயர் காக்க
முடியாதவன் ஆய்விட்டேன். என் வலிமை நன்று நன்று என இராமன்
நாணம் கொண்டான். பல்லுயிர் காத்தற்கு நேர்தல்-

     "சூர் அறுத்தவனும், சுடர் நேமியும்,
    ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும்
    ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
    வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர் என்றான். (2652)

    என்ற பாடல் கொண்டு அறிக. நன்று நன்று - அடுக்குத் தொடர்
இகழ்ச்சி பற்றி வந்தது. ஆல் - ஈற்றசை.                           16