3558. | பிரிந்த ஏதுகொல்? பேர் அபிமானம்கொல்? தெரிந்தது இல்லை; திரு மலர்க்கண் இமை பொருந்த, ஆயிரம் கற்பங்கள் போக்குவான்; இருந்தும் கண்டிலன்; கங்குலின் ஈறுஅரோ. |
திரு மலர்க்கண் இமை - அழகிய தாமரை மலர் போன்ற (தன்) கண்களின் இமைகள், (இமைக்கும் காலத்தில்); ஆயிரம் கற்பங்கள் பொருந்தப் போக்குவான் - ஆயிரம் கற்பாந்த காலங்களை முழுதும் பொருந்தக் கழிப்பவனாகிய (இராமன்); இருந்தும் கங்குலின் ஈறு கண்டிலன் - (தம்பியமைத்த தளிர்ப் படுக்கையில்) இருந்தும் இரவினது முடிவைக் காணாதவனானான்; பிரிந்த ஏதுகொல் - (இந்நிலைமைக்குச்) சீதையைப் பிரிந்தது காரணமோ?; பேர் அபிமானம் கொல் - (அவளிடம் கொண்ட) பெருங்காதலாலா?; தெரிந்தது இல்லை - (உரிய காரணம்) தெரியவில்லை. திருமலர்க்கண் இமைப்பில் ஆயிரம் கற்பங்கள் போக்கும் இராமனுக்கு, சீதை பிரிவால் ஓர் இரவைக் கூடக் கழிக்க முடியவில்லை என்றவாறு. இதனால் இறைவன் காலங்கடந்தவன் என்பதை விளங்கினார். 'காலமும் கணக்கும் நீத்த காரணன்' (5884) என்றார் பிறாண்டும், அரோ - அசை. 18 |