3559.'வென்றி விற் கை
     இளவலை! மேல் எலாம்
ஒன்று போல உலப்பு
     இல நாள்கள்தாம்
நின்று காண்டி அன்றே?
     நெடுங் கங்குல்தான்
இன்று நீள்வதற்கு
     ஏது என்?' என்னுமால்.

    வென்றி விற்கை இளவலை - வெற்றிக்கு உரிய வில்லைக் கையில்
பிடித்த இளையவனாகிய இலக்குவனை (இராமன் பார்த்து); ஒன்று போல
உலப்பு இல நாள்கள் -
ஒரே மாதிரியாக இயல்பு கெடாது கழிந்த
நாள்களை; மேல் எலாம் - முன்பு எல்லாம்; நின்று காண்டி அன்றே -
(என்னோடு சேர்ந்து) இருந்து கண்டுள்ளாய் அல்லவா?; நெடுங் கங்குல்
இன்று நீள்வதற்கு ஏது என்? -
நீண்ட இரவுப் பொழுது இன்று மட்டும்
நீண்டிருப்பதாய்த் தோன்றுவதற்குக் காரணம் என்ன?; என்னும் - என்று
கேட்கும்.

     'என்னுடன் உடனிருந்து கழித்த நாட்களில் நீ கண்டுள்ள இரவை விட
இன்று மட்டும் இரவு நீள யாது காரணம்?' என்று இராமன் இலக்குவனை
வினவினான் என்க. நின்று - இரவு முழுதும் விழித்து நின்று. எலாம் -
இடைக்குறை, தாம், தான், ஆல் - அசைகள்.                       19