3562.சுட்ட கங்குல் நெடிது
     எனச் சோர்கின்றான்,
'முட்டு அமைந்த
     நெடு முடக்கோனோடு
கட்டி, வாள்
     அரக்கன், கதிரோனையும்
இட்டனன் கொல்
     இருஞ்சிறை?' என்னுமால்.

    சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான் - (தன்னைச்) சுட்டு
வருத்திய இரவு மிக நீண்டது என்று மனந்தளர்பவனாகிய (இராமன்);
"வாள் அரக்கன் - வாளை ஏந்திய அரக்கனாகிய இராவணன்; முட்டு
அமைந்த நெடு முடக் கோனோடு -
கடிவாளத்தைக் கையில் கொண்ட
பெரிய அருணனோடு; கதிரோனையும் - கதிரவனையும்; கட்டி - (தன்
ஆற்றலால்) கட்டி; இருஞ் சிறை இட்டனன் கொல் - பெரிய சிறையில்
அடைத்திட்டானோ?; என்னும் - என்று (இராமன்) எண்ணினான்.

     இரவு நீள்தற்கு உரிய காரணம் என்ன என்று மேலும் எண்ணிய
இராமன் ஒரு வேளை இராவணன் கதிரவனை அவனுடைய தேர்ப் பாகன்
ஆகிய அருணனுடன் ஒரு சேரக் கட்டிச் சிறையில் இட்டுவிட்டானோ
என்றான். முட்டு - கடிவாளம். முடக்கோன் - அருணன்; இவன் தொடை
இல்லாதவன் ஆகவே இவ்வாறு கூறப்பட்டது. சுட்ட - செய்த எனும்
வாய்பாட்டுப் பெயரெச்சம். சோர்கின்றான் - வினையாலணையும் பெயர்.
ஆல் - அசை.                                             22