3563.'துடியின் நேர் இடை
     தோன்றலளாம்எனின்,
கடிய கார் இருள்
     கங்குலின் கற்பம் போய்
முடியும்ஆகின், முடியும்,
     இம் மூரி நீர்
நெடிய மா நிலம்'
     என்ன, நினைக்குமால்.

    துடியின் நேர் இடை - உடுக்கையை ஒத்த இடையை உடைய சீதை;
தோன்றலளாம் எனின் - (இரவு விடிவதற்குள்) என் முன் தோன்றாமல்
போனாள் எனின்; கடிய கார் இருள் கங்குலின் - (அந்நிலையிலேயே
இந்தக்) கொடிய கரிய இருளை உடைய இரவாகிய; கற்பம் போய் முடியும்
ஆகின் -
நீண்ட காலம் முடிந்து (விடியல் வரும்) என்றால்; இம்மூரிநீர்
நெடிய மாநிலம் -
இந்த வலிய கடலால் சூழப்பட்ட மிகப் பெரிய உலகம்;
முடியும் - (என் ஆற்றலால்) அழிந்து விடும்; என்ன நினைக்கும் - என்று
(இராமன்) எண்ணுவான். ஆல் - ஈற்றசை.

     சீதை இந்த நீண்ட கங்குற் கற்பம் முடிவதற்குள் வராமல் போய்
விடிவு வந்தால் இவ்வுலகத்தை அழித்து விடுவேன் என்று கூறி இராமன்
சினம் கொண்டனன் என்க. துடி - உடுக்கை, கற்பம் - நீண்ட காலம்,
கற்பாந்த காலம் என்ப. மூரி - வலிமை. மூரி நீர் - கடல், நேர் - உவமை
உருபு; நேர நேர் என வந்தது. மூரி நீர் - பண்புத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகை,                                    23