3564. | 'திறத்து இனாதன, செய் தவத்தோர் உற ஒறுத்து, ஞாலத்து உயிர்தமை உண்டு, உழல் மறத் தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல், அறத்தினால் இனி ஆவது என்?' என்னுமால். |
திறத்து - (தம்) வலிமையினால்; செய்தவத்தோர் இனாதன உற - தவம் செய்யும் முனிவர்கள் பெருந்துன்பம் அடைய; ஒறுத்து - (அவர்களைத்) தண்டித்து; ஞாலத்து உயிர்தமை - உலகத்தில் உள்ள உயிர்களை; உண்டு - (அழித்து) உண்டு; உழல் மறத்தினார்கள் - வாழ்ந்து திரிகிற அறமில்லாதவர்கள்; வலிந்தனர் வாழ்வரேல் - (பெண்களைக் கவர்ந்தும் கூட) வலிமை பெற்று வாழ்வார்களானால்; இனி அறத்தினால் ஆவது என் - இனிமேல் அறத்தினால் ஆகும் பயன் எதுவோ?'; என்னும் - என்று சொல்லுவான். ஆல் - ஈற்றசை. அறத்தவர் வருந்த மறத்தவர் வெற்றி பெற்று மகிழ்வுடன் வாழும் நிலையில் அறத்தினால் விளையும் பயன் யாதோ? என இராமன் வருந்தினான் என்க. திறத்து - வலிமையால், இன்னாதன - துன்பங்கள். 24 |