3567. நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில்,
மூல மா மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் என, கங்குல் கழிந்ததே.

    நீலமான நிறத்தன் - நீலமான நிறத்தை உடைய இராமன்;
நினைந்தவை - (சீதையைப் பிரிந்த துன்பத்தால் மனத்தில்) நினைந்த
எண்ணங்கள்; சூலம் ஆக - சூலம் போல; தொலைவுறும் எல்லையில் -
(வருத்த) அழிக்க முயலும் நேரத்தில்; மூல மாமலர் முன்னவன் -
(எல்லாப் பொருள்களுக்கும்) மூல காரணமான நாபிக் கமலத்தில் தோன்றிய
முதல் கடவுளான பிரமன்; முற்றுறும் - முடிகிற; காலம் ஆம் என -
ஊழிக் காலம் (கழிந்தது) ஆம் என்று சொல்லுமாறு; கங்குல் கழிந்ததே -
இரவுப் பொழுது நீங்கிற்று.

     இராமனுக்கு ஏற்பட்ட பிரிவுத் துயரின் கொடுமையைக் கூறுவதற்காக,
இரவு சூலமாகவும், அது கழிதற்கு ஆன கால நீட்சி பிரம கற்பம் போல்
மிக நீண்டதாகவும் கூறப்பட்டது. தொலைவுறுதல் - அழிதல், முன்னவன் -
பிரமன்.                                                     27