அறுசீர் ஆசிரிய விருத்தம் 3568. | வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து, அளியும் கள்ளும் சிலம்பும் பூங் கோதைக் கற்பின் கடலில் படிவாற்கு, புள்ளும் சிலம்பும்; பொழில் சிலம்பும்; புனலும் சிலம்பும்; புனை கோலம் உள்ளும் சில் அம்பும் சிலம்பாவேல், உயிர் உண்டாகும் வகை உண்டோ? |
வெள்ளம் சிலம்பு பாற்கடலின் - வெள்ளம் ஒலிக்கிற திருப்பாற் கடலில்; விரும்பும் துயிலை வெறுத்து - விரும்பி(த் துயிலுகிற) தூக்கத்தை வெறுத்து; அளியும் கள்ளும் சிலம்பும் பூங்கோதை - வண்டுகளும் (அவ்வண்டுகள் வரக் காரணமான) தேனும் ஒலிப்பது போல் தோன்றும் மலர்களால் ஆகிய மாலையை அணிந்த கூந்தலை உடைய சீதையினது; கற்பின் கடலில் படிவாற்கு - கற்பாகிய கடல் முழுகியவனாகிய இராமனுக்கு; புள்ளும் சிலம்பும் - (இரங்கிப்) பறவைகளும் ஒலிக்கும்; பொழில் சிலம்பும் - சோலைகளும் ஒலிக்கும்; புனலும் சிலம்பும் - தண்ணீரும் (அருவி நீர், ஆற்று நீர் முதலியன ஒலிக்கும்; புனை கோலம் உள்ளும் - இராமன் கொண்ட போர்க் கோலத்தின் (போது) (அம்பறாத்தூணியில்) இருந்த; சில் அம்பும் - சில அம்புகள்; சிலம்பாவேல் - (ஒன்றோடு ஒன்றுபட்டு) ஒலிக்காவிட்டால்; உயிர் உண்டாகும் - இராமனின் உயிர் அழியாது நிற்பதற்கு; வகை உண்டோ - வழி உள்ளதோ. விடியற்காலையில் தோன்றிய ஒலிகள் இராமனின் துயர் கண்டு இரங்கி ஒலித்த ஒலிகள் என்று தற்குறிப்பேற்றமாகக் கூறப்பட்டன. பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனே சீதையின் கற்புக் கடல் படிவான் என அவதார நிகழ்வு கூறினார். அளி - வண்டு. கள் - தேன். சிலம்புதல் - ஒலித்தல். புனை கோலம் - இராமன் கொண்ட போர்க் கோலம். சில் அம்பு - சில அம்புகள். பூங்கோதை - உவமையாகுபெயர். சொற் பொருள் பின் வரு நிலை அணி காண்க. 28 |