3569. மயிலும் பெடையும் உடன் திரிய,
     மானும் கலையும் மருவி வர,
பயிலும் பிடியும் கட களிறும்
     வருவ, திரிவ, பார்க்கின்றான்;
குயிலும், கரும்பும், செழுந் தேனும்,
     குழலும், யாழும், கொழும் பாகும்,
அயிலும் அமுதும், சுவை தீர்த்த
     மொழியைப் பிரிந்தான் அழியானோ?

    பெடையும் மயிலும் உடன் திரிய - பெண் மயிலும் ஆண் மயிலும்
(ஒன்றாக மகிழ்ச்சியோடு) திரிய; மானும் கலையும் மருவி வர - பெண்
மானும் ஆண் மானும் நெருங்கித்திரிய; பயிலும் பிடியும் கடகளிறும் -
விளையாடி வருகிற பெண் யானையும் மதம் மிக்க ஆண் யானையும்
(ஆகிய இவை); வருவ திரிவ பார்க்கின்றான் - (தன் எதிரே) வந்து
திரிவதை இராமன் பார்க்கின்றான்; குயிலும் - குயிலின் குரலோசையும்;
கரும்பும் - கரும்புச் சாற்று இனிமையும்; செழுந்தேனும் - முற்றிய
தேனின் சுவையும்; குழலும் - குழலின் இசை இனிமையும்; யாழும் -
யாழிசையின் இனிமையும்; கொழும்பாகும் - (முற்றக் காய்ச்சிய)
கொழுமையான சர்க்கரைப் பாகின் சுவையும்; அயிலும் அமுதும் -
(அனைவரும் விரும்பி) உண்ணும் அமுதத்தின் சுவையும்; சுவை தீர்த்த -
(ஆகிய இவற்றின் சுவையையும் இனிமையையும்) தன் குரல் இனிமைக்கு
முன் இனிமையே இல்லை என்று தீர்த்த; மொழியைப் பிரிந்தான் - இனிய
சொல்லை உடைய சீதையைப் பிரிந்தவனாகிய இராமன்; அழியானோ -
வருத்தப்படாமல் இருப்பானோ.

     காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்பது போல்
இணையாக இராமன் முன் திரிந்த மயில், மான், களிறு ஆகியவை அவனது
பிரிவுத் துயரத்தை மிகுவித்தன என்றபடி. கலை - ஆண்மான், பிடி - பெண்
யானை கடகளிறு - மதம் மிக்க ஆண் யானை. மொழி - முதலாகு பெயர்.
சீதையின் பேச்சினிமையைக் கூறும் பகுதியின் சிறப்பை எண்ணுக. குயில்,
கரும்பு, குழல், யாழ் - இனிமையும் சுவையும் குறித்து வந்தன. பண்பாகு
பெயர்கள்.                                                 29