சீதையைக் கவர்ந்த அரக்கனைத் தேடல் 3572. | அன்னகாலை, இள வீரன், அடியின் வணங்கி, 'நெடியோய்! அப் பொன்னை நாடாது, ஈண்டு இருத்தல் புகழோ?' என்ன, புகழோனும், 'சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து' என்ன, மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெங் கானம் போயினரால். |
இள வீரன் - இளைய வீரனாகிய இலக்குவன்; அன்ன காலை - அப்பொழுது; அடியின் வணங்கி - (இராமனது) அடிகளில் வணங்கி; 'நெடியோய் - (புகழில்) பெரியவனே; அப்பொன்னை நாடாது - அந்தச் சீதையைத் தேடாமல்; ஈண்டு இருத்தல் புகழோ - இவ்வாறு இங்கு (வீணாக) இருப்பது புகழைத் தரும் செயலோ?'; என்ன - என்று கூற; புகழோனும் - புகழ் மேம்பட்ட இராமனும்; 'சொன்ன அரக்கன் - (சடாயு) சொல்லிய அரக்கன்; இருக்கும் இடம் - இருக்கின்ற இடத்தைத்; தொடர்ந்து துருவி அறிதும் - (நாம்) தொடர்ந்து சென்று தேடிக் காண்போம்; என்ன - என்று சொல்ல; மின்னும் சிலையார் - (அதற்குப் பிறகு) ஒளி பொருந்திய வில்லைக் கையில் ஏந்திய வீரர்களான இராமலக்குவர்கள் (இருவரும்); மலை தொடர்ந்த வெயில் வெங்கானம் - மலைகள் தொடர்ச்சியாக அமைந்த வெயிலால் வெப்பமடைந்த காட்டு (வழியில்); போயினர் - சென்றார்கள். ஆல் - அசை. 32 |